பொதுவாக, தமிழ் ஆர்வலர்கள் வடமொழி அதாவது சமஸ்கிருதம் குறித்து கீழ்க்கண்ட விவாதங்களை முன்வைக்கின்றனர்.
1. சம்ஸ்கிருதம் பெரும்பாலான சொற்களைத் தமிழிலிருந்தே கடன் வாங்கியது.
2. தமிழுக்கும் வடமொழிக்கும் தொடர்பே இல்லை. தமிழ் வடமொழிக் கடன் வார்த்தைகள் இல்லாமல் தனித்தியங்கக் கூடியது.
கொஞ்சம் முன்னுக்குப்பின் முரணாகத் தெரியவில்லை?? பெரும்பாலான வடமொழிப் பதங்கள் தமிழிலிருந்து கடன் வாங்கி மாற்றத்திற்குட்பட்டவை என்றால் சமஸ்கிருத வார்த்தைகளைத் தமிழில் பயன்படுத்துவதை எதிர்ப்பானேன்? என்னதான் மாற்றத்திற்குட்பட்டாலும் சிதைந்து போனாலும் அவையும் தமிழ் வேர்களை உள்ளடக்கிய வார்த்தைகள் தானே? வேண்டுமென்றால் தமிழ் வேர்ச்சொற்களே வடமொழியின் பெரும்பாலான வடசொற்களுக்கு மூலம் (அதன் மூலமாக வரும் இன்னொரு முறைஅமைவு முடிவு என்னவென்றால் பெரும்பாலான இந்திய மொழிகளின் மூலம் தமிழே!) என்பதை நிறுவும் முயற்சியில் அல்லவா அவர்கள் ஈடுபட வேண்டும்.
தமிழ் தனித்தியங்கக் கூடியது என்ற கொள்கையை முன்வைத்ததற்கு அரசியல் வரலாற்றுக் காரணங்கள் உண்டு. ஆனால் மொழியாராய்ச்சியின் முடிவுகள் படி அது இன்றைக்குத் தேவையற்றது மட்டுல்ல, தமிழுக்கு ஒத்து வராதது. தமிழ்ச் சொற்களின்றி வடமொழி தனித்தியங்க முடியுமா என்று சமஸ்கிருத அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டிய காலம் இது. எடுத்துக்காட்டாக, முகம் என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். முழுக்க முழுக்கத் தூய தமிழ்வார்த்தை. ஆர்.எஸ்.எஸ்-சால் மூளை மழுக்கப்பட்டவர்கள் தவிர மற்றனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய உண்மை. வடமொழி மட்டுமன்றி அனைத்து இந்திய மொழிகளிலும் (வடகிழக்கு மாநிலங்களின் மொழிகளைத் தவிர, ஏனென்றால் பெரும்பாலும் அவை திபெத்தோ-பர்மன் மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை) சில மாற்று உச்சரிப்போடு முகம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
இன்னொரு சுவாரசியமான தகவல். தமிழில் (மலையாளத் தமிழ் உட்பட) குட்டி என்ற வார்த்தை அளவில் சிறிதானது என்ற கருத்தை உணர்த்தப் பயன்படுகிறது. பொதுவாக, இவ்வார்த்தை தமிழைத் தவிர வேறெந்த மொழியிலும் இல்லை என்பது கருத்து. ஆனால், வங்காளத்தில் குட்டி என்ற வார்த்தை அதே பொருளுடன் பயன்படுத்தப்படுகிறது. மாசி என்றால் சித்தி என்று வங்காளத்தில் பொருள். ‘இளைய சித்தி’ என்று சொல்வதற்கு ‘குட்டி மாசி’ என்கிறார்கள். அதைப் போல், பிறபகுதிககைப் போல் ‘ஷக்கர்’ என்ற வார்த்தைக்குப் பதில் சீனியை சீனி என்றே வங்கத்திலும் கலிங்கத்திலும் வழங்குகிறார்கள். இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்கு தெற்காசியா முழுவதிலும் தமிழ் மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தின் பரவலும் தாக்கமும் இந்திய மற்றும் உலக வரலாற்றிலிருந்து முழுமையாக இருட்டடிக்கப்பட்டிருக்கின்றன என்பவை கொஞ்சம் அலசிப் பார்த்தால் தெள்ளத் தெளிவு.
இலத்தீனுக்கும், கிரேக்கத்திற்கும் மேற்கில் கிடைத்த அங்கீகாரமும் , மதிப்பும் தமிழுக்குக் கிழக்கில் கிடைக்கும் நாள் எப்போது எனத் தெரியவில்லை. அது வரை தெற்காசியர்கள் தங்கள் வரலாற்றை மறுதலிக்கும் தோமைகளாகவே வாழ்வார்கள். தன் அடையாளத்தை மறக்கும் எந்த இனமும் எழுச்சி பெற்றதாக வரலாறு இல்லை.
குறிச்சொற்கள்: குட்டி, சமஸ்கிருதம், தமிழ், வங்காளம், வடமொழி